வலைப்பதிவில் தேட...

Saturday, July 28, 2012

என் டி வானமாமலையும் வானுமாமலையும்

என்ன ஒரு காலக்கிரகம்...




ஒரு எஸ் ஐ ஒரு மனிதனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லுகிறார். அதுவும் உடை அணியாமல் ( அம்மணமாக அல்ல)

"மப்டி" என்று சொல்லுகிறார்கள்....

போகட்டும் என்ன எழவோ அது...

அவர் ஒன்றும் பெரிய மணல் அள்ளும் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி ஆள் அல்ல சாதாரணமாக ட்ராக்டர் ஓட்டி பிழைப்பை நடத்தும் சாமானிய மனிதன்.

அல்லது தினமும் கூலி வேலை செய்யும் ஒரு சக மனிதன். வான(னு) மாமலை. குடும்பத்தலைவனைக்காலி செய்து விட்டு அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பாம்... அத்தோடு மூன்று  லட்சமாம் ( நாய்க்கு அதன் வாலை வெட்டி சூப் வைத்துக்கொடுத்த கதை ஒன்று நடப்பில் இருக்கிறது)

இந்த பெயரைக்கேட்டவுடன் எம் ஆர் ராதாவுக்காக அன்றைய சூப்பர் ஸ்டார் திரு எம் ஜி ராமச்சந்திரனைத்  துருவித்துருவிக்கேள்விகள்  கேட்ட அந்தப் பொதுவுடைமை வாதியின் பெயர்  நினைவில் மிளிர்கிறது.  நாற்பது கூட நிறைவடையாத அந்த மனித உடலைத்தனது மடியில் கிடத்தி அந்த அம்மாவின் அலறல் இருக்கிறதே இந்த உலகமே அழும்.

ம்ம்ம்...

மூன்று லட்சம் ரூபாயைக்கொடுத்து அவருக்கு ஒரு அரசு வேலைக்கும் பரிந்துரைத்திருக்கிறார் நமது புரட்சித்தலைவி(!)

புரட்சித்தலைவர் என்றால் அதுஒருவர்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  ராமானுஜர்தான். அவர் வைணவர் (சைவர் அல்ல) சாப்பாட்டிலே கூட சைவம் அசைவம் என்கிறார்கள்; வைணவம் என்ற ஒரு சாப்பாட்டு முறை  நமக்கு பரிச்சயப்படவேயில்லை...

"நான் படித்த வேதம் இந்தத்தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சொல்லிக்கொடுப்பதால் எனக்கு நரகத்தைக்கொடுக்குமென்றால் சந்தோஷமடைவேன். ஏனென்றால்  நான் இந்த மந்திரத்தை என்  இனிய  தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு திருக்கோஷ்டியூர் மதில் மேல் நின்று உரக்கக்கூறி அனைவரும் கற்றுக்கொள்ளச் செய்தமைக்காகவும் அவர்கள் இந்த மந்திரத்தை கேட்டுப்பயனுறுவார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் எனக்கு மட்டும் நரகம் கிடைக்கட்டும் அதைப்பயின்றதற்காக அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் அன்றோ (?!)

சொர்க்கம்  நரகம் அது கிடக்கிறது...
ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  கிடைக்கும் என்று போராடியவன் பெரும் புரட்சிக்காரனன்றோ?


அவருக்குப் பிறகு சனாதனத்தின் நெற்றியிலடித்த மகாகவி பாரதியார்...






அப்புறம் அந்தக்கொள்கையை வடிவமைத்த காரல் மார்க்ஸ், உறுதுணையாக நின்ற ஜென்னி, ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ்,தோழர் லெனின், தோழர் ஸ்டாலின், தோழர் சே குவேரா, தோழர் ஃபிடல் காஸ் ட்ரோ, தோழர் ரால் காஸ்ட்ரோ , தோழர் சாவேஸ்  போன்றவர்களைத்தவிர வேறு பெயர்கள் நினைவுக்கு வருவதில்லை

அதை விடுங்கள். ..

போலீஸ் துறையென்ற ஒன்று 1963 முதல் தேர்தல் தொடங்கி  1967 வரை ஒரு  நான்கு ஆண்டு காலம்மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திரு கக்கன் ( அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்) அவர்களால் கையாளப்பட்டது.


அதற்கு முன்னால் கூட தமிழகத்தின் முதல்வராக இருந்த பச்சைத்தமிழன் காமராசர் முதல்வராக (1954-1963) மந்திரி சபையில் இந்தத்துறையை யார் வைத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை.
அவருக்குப்பிறகு முதல்வரான அனைவருமே அது பக்தவச்சலம் ஆனாலும் சரி; அண்ணாதுரையானாலும் சரி; கருணாநிதியானாலும் சரி;  எம் ஜி ராமச்சந்திரன் ஆனாலும் சரி; ஜெயலலிதாவானாலும் சரி...

( முன்னொட்டுக்களான அறிஞர், கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என்பதை த்தவிர்த்திருக்கிறேன்).

போலீஸ் துறையை முதல்வர்கள் வசமே வைத்திருக்கிறார்கள் (தாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற குறைந்த பட்ச அறிவே இல்லாமல்)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இவர்கள் ஒதுக்கிய துறைகள் சமூக நலம் அல்லது ஆதி திராவிடர் நலம் மட்டுமே. நாடாளப்பிறந்தவர்கள் ஆதித்தமிழர்கள் இல்லை போலும்

போலீஸ் என்பவன் சீருடையில் இருக்கும் விவசாயி மகன் என்ற மிகப்பெரிய அடை மொழியை விடுங்கள்.

அவன் என்ன செய்கிறானோ அது தான் சட்டம்.

*பத்மினி வழக்கில் கற்பழித்தார்கள் கூட்டாக

*தாமிரபரணியில் 17 பேரைக்கூட்டாக அடித்துக்கொன்றார்கள்  நதியின் நீரில்

*வாச்சாத்தியில் வனக்குடிப்பெண்களைக்கூட்டாகக்கற்பழித்தார்கள் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை நண்பர்களுடன் (!) கூட்டாகக்கற்பழித்தார்கள்

*பரமக்குடியில் அமைதியாக அஞ்சலி செலுத்தச்சென்ற அப்பாவிகள் ஆறு பேரை அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.
வானுமாமலைக்குக்கூட நியாயம் கிடைத்திருக்கிறது எனலாம் அவரது உயிர்த்தியாகத்திற்குப்பிறகு.

ஆனாலும் போலீஸ் செய்த படுகொலைக்கு ஒரு தேர்ந்தேடுக்கப்பட்ட அரசுமூன்று லட்சங்களையும் ஒரு வேலை வாய்ப்பையும்  மட்டுமே விலையாகக்கொடுப்பதென்றால் இந்த தேசம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? 

வேலைக்குத்தகுதியானவர்கள் என்றால் அது ஒரு சாவுக்குப்பிறகுதான் என்று ஆகி விடாதா?

கைம்பெண்கள் கதி இதுதானா

திரு விக சொன்ன கைம்பெண்கள் மறு வாழ்வு இதுதானா?

"நேர்படப்பேசு

நையப்புடை"

- மகாகவி பாரதி