வலைப்பதிவில் தேட...

Friday, May 11, 2012

அழியாத நினைவலைகள்

ஒரு மனிதன் தனது இருபதுகளில் ஒரு இடது சாரியாகவும் தனது அறுபதுகளில் ஆன்மீகவாதியாகவும் இல்லாமல் இருக்க முடியாது என்பார்கள். அதை உடைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

 இந்திய மண்ணில் ஒரு மூன்று சதம் பேர் சனாதனவாதிகளாக (மனு(அ)தர்மவாதிகள்)இருந்து கொண்டு எப்படி இந்த தேசத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அது போல உலகம் முழுமைக்கும் நாத்தீகம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் அடக்கியாள முயற்சிக்காதவர்கள். மனித நேயம் உள்ளவர்கள்.


அந்த வகையில் பொதிகை டி வியில் உ வாசுகியும் ஞானியும் தொகுத்த பெரியார் தொடரில் வருவாரே மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் அவர் மிகவும் என்னைக்கவர்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளராக தனது இளம் வயதில் பரிணமிக்கிறார். வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இறுதிப்படுக்கையில் கிடக்க நேரிடுகிறது, அடுத்து மரணம்தான்..

 என் வி குறிப்பிட்டது போல வயது ஆகிவிடுகிறது நமக்கு. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் தனது செயல்பாட்டைக்குறைத்துக்கொள்கிறது. அனைத்து உறுப்புகளும் தனது செயல்பாட்டை முற்றிலுமாகக்குறைத்துக்கொண்டு விட்டால் அல்லது செயல்பாட்டை  நிறுத்திக்கொண்டால்  மரணம்  நம்மைத்தழுவிக்கொள்ளும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் தனது மரணப்படுக்கையில் இருப்பார். அப்போது அவரது சிந்தனை இதுவாக இருந்தது. அதை இப்படி வெளிப்படுத்துவார். வழக்கமான  நடை முறையில் அறுபதுகளில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு எனது நாத்தீகக்கொள்கையைக்கை விட்டதாக யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறுதி மூச்சு வரை நான் நாத்தீகவாதியாகவே இருக்கிறேன் நாத்தீக வாதியாகவே மரணம் அடைவேன் என்பதை பத்திரிகையாளர்களை அழைத்து குறிப்பிடுவார்

இருபதுகளில் மார்க்சீய சிந்தாந்தங்ககளின் பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். தன்னையும் அப்படியான ஆளாக திரையில் திரு வைரமுத்து எரிமலை எப்படிப்பொறுக்கும் (ஏ வி எம்மின் சிவப்பு மல்லி 1980) போன்ற பாடல்களால் கவர்ந்திருந்தார். வருடாவருடம் நடக்கும் காரைக்குடி கம்பன் விழா ( 1983)வில் சிறப்பு விருந்தினராக திரு வைரமுத்து வந்திருந்தார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


அதன்பிறகு காரைக்குடி செட்டி நாடு மகளிர் கல்லூரியில் 89 ஆம் ஆண்டு கல்லூரி துவங்கிய சமயம் கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியப்பெருமக்களுக்கும் பிரச்சனை.  நிர்வாகத்தை எதிர்த்து பேராசிரியர்கள் வீரச்சமர் சமர் புரிந்து கொண்டிருந்த நேரம் சகோதர தொழிற்சங்கங்கள் ஆதரவுடன். நாங்கள் தொலை பேசி ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம்.

 பேரா. மாடசாமி, பேரா. ராஜு, பேரா பார்த்தசாரதி, பேரா. விஜயகுமார்  பேரா மனோகரன் காரைக்குடி பேரா தேனப்பன், பேரா ஆவுடையம்மாள்,  நாகலிங்கம் குமரவேல் (தேவகோட்டை)போன்ற மூட்டா சங்கத்தலைவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சாலையோர வகுப்புகள் நடத்தி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்துமாணவிகளுக்கு கல்வி கெடாவண்ணம் போதித்துக்கொண்டிருந்தனர். பட்டிமன்றப்பேச்சாளர் சரஸ்வதி ராம நாதன் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அந்த சாலையோர வகுப்பறைகள் போராட்டம் முடியும் தருவாயில் அன்றைய திருவெரும்பூர் எம் எல் ஏ திருமதி பாப்பா உமா நாத், மற்றும் திரு வைரமுத்து ( பேரா மாடசாமியின் வகுப்பறைத்தோழன்) இருவரையும் அழைத்து ஒரு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மாணவர்கள், மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன். அப்போதைய காரைக்குடி எம் எல் ஏ அவர்களின் புதிய ஹோட்டல் மலரில் வைரமுத்து தங்கியிருந்தார். எனது குழந்தை  திலிப் சுகதேவுக்கு அப்போது ஒரு வயது .நான் எனது இணை மற்றும் இரு நண்பர்களுடன் அந்தப்புகைப்படம்.





தோழர் பாப்பா உமா நாத்கையில் திலீப் சுகதேவ்.
நிற்பவரில் வலது கோடி எனது துணைவியார்

மற்றோர் புகைப்படத்தில் தோழர் ஆசிரியர்
என் ராமச்சந்திரன் கையில் திலிப் சுகதேவ்.




இன்னும் சில   நிழற்பட நினைவுகள் அடுத்தாக....

Thursday, May 3, 2012

அவர்ணக்கவிதைகள் சில...

படித்ததில் பிடித்த சில அவர்ணக்கவிதைகள்
கவிஞர்களின் பெயர்களுடன்:


I




சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்

காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு?
என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

"உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
 உங்க சாதிக்குத்தானே" என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ

ஒன்று செய்!
உன்னைறியாத ஊரில் போய்
உன்னைப்பறையனென்று சொல்
அப்போது புரியும் என் வலி

                                                             - இராசை கண்மணி ராசா



II






என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்

                                                                     -ஆதவன் தீட்சண்யா




III





விளம்பரப்படுத்துகின்றன
சாதிகளால் ஆன தேசம்
இதுவென்று
சமத்துவபுரம்
பொதுமயானம் என்று
பெயர்களைத்
தாங்கி நிற்கும்
பலகைகள்

                                                                  -யாழி




IV


சம பலத்துடன்
இருந்தபோதும்
இரண்டாம் நகர்த்தலுக்கே
தள்ளி வைக்கப்படுகிறது
சதுரங்கத்திலும்
கருப்புக்காய்கள்

                                                                                                   -யாழி



V





ஆசை ஆசையாய்
காதைத்தொட்டுக்காட்டி
பள்ளிக்கூடம் சேர்ந்த அன்று
அகர முதல் எழுத்துக்குப்பின்
அறிந்து கொ\ண்டேன்
என் சாதியை

                                        - பெரியசாமி



VI






எங்கும் இல்லை
என் மூதாதியின் பெயர்
நீ எழுதிய வரலாறு

                                             - மகுடேஸ்வரன்