வலைப்பதிவில் தேட...

Monday, January 16, 2012

மாட்டுக்கறியும் மனிதர்களும்

நாடெங்கும்
விலைவாசி உயர்வு
ஒரு டீயின் விலை
அறுபது பைசா என்பது
விலைவாசி உயர்வல்ல

பொது கிளாசில்
டீ கேட்க
தனி கிளாசில்
டீ கொடுக்க

ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்கள் என்று
உயர்ந்து கிடக்கிறது
-கவிஞர் கந்தர்வன்
எண்பதுகளின் இறுதியில் எழுதிய கவிதை இது. இன்றைக்கு ஒரு டீயின் விலை ஆறு ரூபாயைத்தாண்டி நிற்கிறது. நிற்க...
ஹிமாச்சலப்பிரதேசத்தில்  ஜஜ்ஜார் நகரில் விஜய தசமியை ஒட்டிய ஒரு தினத்தில் செத்த மாட்டை உரித்த குற்றத்திற்காக ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் சார்ந்தது. கைபர் போலன் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று வரலாறு சொல்லுகிறது அவர்கள் ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தவர்கள் அதையே உணவாகவும் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்கு முன்பே மூடப்பட்ட சாக்கடை கொண்ட ஹரப்பா மனிதர்கள் நாகரீகத்தில் மேம்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு பொதுப்புத்தியில் உறைத்திடுப்பதைப்போன்று ஆடுகள் மட்டுமே மேன்மை நிறைந்த புலால் உணவு உட்கொண்டு வாழ்ந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.
கோமேதகயாகம் என்ற பெயரில் மாட்டை சுட்டு சாப்பிட்டு யாகம் (?) செய்து வாழ்ந்திருக்கிறார்கள்
இவர்கள் அளவில்லாமல் மாடுகளைக்கொல்லுவதைப்பார்த்துதான் கொல்லாமை என்னும் ஒப்பரிய தத்துவத்தையே கௌதமபுத்தர் அருளியிருக்கிறார்.
ஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று திரும்பிய பிறகு ஒரு பதிவில் இருக்கிற கறிகளிலேயே விலை மிகவும் உயர்ந்ததாக இருந்தது மாட்டுக்கறிதான் என்று சொல்லியிருந்தார். எனக்கு மட்டும் சிறு வயதில் நாய்க்கறி சாப்பிடும் பழக்கத்தை (வட கிழக்கு மாகாணங்களில் நாய்க்கறிதான் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்) ஏற்படுத்தியிருந்தால் அதைத்தான் கடைசி வரை கைக்கொண்டிருப்பேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுதானே நடைமுறை.
நக்கீரன் கோபால் மாட்டுக்கறி சாப்பிட்டாரா  இல்லையா என்பதல்ல இன்றைய முக்கியம். மாமி ஒருவர்மாட்டுக்கறி சாப்பிட்டாரா இல்லை சாப்பிட வில்லையா என்பதுதான் கேள்வி.  அவர் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் அதை எழுதுவது எப்படி சரியாகும் என்று மரக்கறி  உணவு உண்பவர்கள் போராடுகிறார்கள்(!)
உலகம் முழுமைக்கும் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள்தான் அதிகம் இந்த உண்மை இன்று நக்கீரன் அலுவலகத்தை உடைப்பவர்களுக்கு தெரியுமோ இல்லையா என்பது நமது கேள்வி. 
மரக்கறி உணவு உண்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று யார் சொன்னது. அப்படியென்றால் திகாரில் ராசாவுடன் ஷர்மா ஏன் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கிறார். கேதன் தேசாய் 3500 கோடி ரூபாயும் 3500 கிலோ தங்கமும் ஏன் சட்டத்தை மீறி சேர்க்கிறார்(அல்லது  ஏன் கொள்ளையடிக்கிறார்?).
மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் எந்த விதத்திலும் யாருக்கு குறைந்தவர்கள் அல்லர். அவர்களும் சக  மனிதர்கள் என்பதை நினைவு கொள்ளுதல் அவசியம் என்று தோன்றுகிறது.