வலைப்பதிவில் தேட...

Wednesday, September 28, 2011

உண்ணாவிரதங்கள் ஒரு பார்வை

சமீப காலங்களில் உண்ணா விரதங்கள் இந்திய தேசத்தில் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இதன் தோற்றுவாய் என்ன என்று யோசித்த வேளையில் கிடைத்த தகவல்களின் தொகுப்புதான் இப்பதிவு.


உண்ணாவிரதத்தின் தொடக்கம் எழைகளில் துவங்குகிறது. அர்ஜுன் சென் குப்தா தலைமையிலான குழு இந்தியாவில் 83 கோடிப்பேர்  நாளொன்றுக்கு ரூபாய் 20 கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பை இந்திய அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறது. ஒரு 4 டீ குடித்தாலே அந்த இருபது ரூபாய் என்பது இன்றைய தேதியில் பத்தாது.

நிலைமை இப்படி இருக்க, மத்திய அரசு வறுமைக்கோடு பற்றிய ஒரு அரிய அறிவிப்பைச்செய்திருக்கிறது. அது கிராமப்புறத்தில் ஒரு நாளில் ரூ 25 வருமானம் ஒருவர் பெற முடியுமென்றால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பதாக அர்த்தமாம். அதே போல நகர்ப்புறத்தில் இருப்பவர் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ 32 சம்பாதிக்கத்திராணியிருந்தால் அவரும் வறுமைக்கோட்டுக்கு கீழே என்ற வரையறையில் வரமாட்டார். இருக்கட்டும்.


இன்றைக்கு அன்னா ஹசாரே (இரண்டு இடங்களில், தில்லி),

பாபா ராம்தேவ் யாதவ் (ராம்லீலா மைதானம் தில்லி),

மேதா பட்கர் ( நர்மதா தொடங்கி கூடங்குளம் வரை)

அப்புறம் நரேந்திர மோடி( இரண்டாயிரம் பேரை பலி வாங்கிய பிறகு,  அகதிகள் முகாமிலிருந்து இன்றும் வீடு திரும்பமுடியாத முஸ்லீம் சகோதரர்கள் 30,000 பேர் அவல வாழ்வு வாழும் (!) குஜராத் சூழலில்) ,

நல்ல வேளையாக எடியூரப்பா ரெட்டி உடன்பிறப்பாளர்கள் இது போல் இன்னும் இறங்கவில்லை

இருப்பினும் இன்றைய தேதியில்  உண்ணா நோன்புப்பட்டியல் நீளுகிறது.

கூடங்குளம் பொதுமக்களும் ஆறேழு நாட்கள் உண்ணா  நோன்பு இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் நிறுத்தியிருக்கிறார்கள்.

திருப்பூரில் கோவையில் விசைத்தறித்தொழிலாளர்களும் ஒருவாரத்திற்குப்பக்கமாக உண்ணா நோன்பில் இருக்கிறார்கள்.

நாகப்பட்டினத்தில் இரட்டை மடி வலை வைத்து மீன் பிடிக்க உரிமை கோரி மீனவ நண்பர்கள் உண்ணா நோன்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

காலை டிபன் சாப்பிட்டு மெரினாவில் ஈழத்தமிழர்களுக்காக மனைவியோடும் மகளோடும், துணைவியோடும் தமிழினத்தலைவன்(!) மதியசாப்பாட்டுக்கு முன்பே உண்ணாவிரதம் முடித்த நாகரிகம் நம்மை வியக்க வைக்கிறது.

93இல் காவிரிப்பிரச்சனைக்காக உடன்பிறவா சகோதரியோடு ஏர்கூலர் வசதியுடன் நடந்த ஒரு நாள் போராட்டம் நம்மை ஏளனம் செய்கிறது.

தவிரவும் நாடு முழுதும் ஆங்காங்கே உண்ணா விரதங்கள் எதிர்ப்பின் அடையாளமாக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மோகன் தாஸ் (கரம்சந்த் என்பது அவரது அப்பாவின் பெயர், காந்தி என்பது அவரது சாதிப்பெயர் (சர் நேம் என்பார்கள் இந்தியில்) பனியா(வியாபாரம் செய்யும் சாதி அவருடையது)

மோகன்தாஸ்  முதன் முதலில் உண்ணா நோன்பு இருந்தது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையை எதிர்த்துதான் என்பது தெரிகிறது.
அத்றகு முன்பாக அவர் என்னவிதமான போராட்டங்களை நடத்தினார் என்று நோக்க வேண்டி இருக்கிறது.


1915 இல் அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் (வயது நாற்பதைத்தாண்டிய நிலையில்)  காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்ற கையோடு ஒத்துழையாமை இயக்கம் என்ற ஒரு போராட்டத்தை பிரிட்டிஷாருக்கு எதிராக 1922 இல் ஆரம்பிக்கிறார். சௌரி சௌரா என்ற இடத்தில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் பிரச்சனை வெடித்தவுடன் அதை அப்பட்டமாகக வாபஸ் வாங்குகிறார்.

அப்புறமாக மார்ச் 1930இல் தண்டி யாத்திரை  நடத்துகிறார் ஒரு 200 கி மீட்டருக்கு மேலான நடை பயணம் அது.

முதன்முதலாக அவர் ஆரம்பித்த உண்ணா விரதம் என்பது மே 8,1933 துவங்கி ஒரு இருபத்தோரு நாள்

அது எதற்காகவென்றால் பிரிட்டிஷ் பிரதமர் ராம்செ மெக்டொனால்டு என்பவர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் கோரிக்கையை  நாட்டில் நாலில் ஒரு பகுதியாக இருக்கும் தலித் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்ட் இந்தியாவில் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை முறை அறிவித்தார். அது இந்து தர்மத்திற்கு எதிரானது என்ற வாதத்தைவைத்து மோகன் தாஸ் சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்தார்.

அப்படியென்றால் அதற்கு முன் உண்ணா விரதங்கள் என்ற பெயரில் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லையா?

சிறையில் சம உரிமை வேண்டும் எங்களுக்கும் (இந்தியர்களுக்கும்) என்று அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் போர்க்கொடி உயர்ததியவர் உன்னதமான புரட்சிகர கொள்கைளின் பங்காளன் பகத்சிங்கின் தோழன் ஜதீந்திர நாத் தாஸ் ஜுலை 19,1929 தொடங்கி 63 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.


என்றால் அதைப்பின்பற்றிதான் மோகன் தாஸ் அவர்கள் இந்தப்போராட்ட வடிவத்தைக்கையில் எடுத்திருக்கிறார்.
மாவீரன் பகத்சிங்கும் அவரது தோழர்களான
சுகதேவ் தாபர் (பஞ்சாப் மா நிலம் லூதியானா 15/05/1907-23/03/1931)
ராஜகுரு (மத்தியப்பிரதேச மா நிலம் ரத்லாம் 24/08/1908- 23/03/1931)
மாவீரன் பகத் சிங் (இன்றைய பாகிஸ்தான் லாகூர் 28/09/1907-23/03/1931) மூவருமே இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாரைப்போல் சம உரிமை வேண்டும் என்று முழங்கி அதைப்பெற்றிருக்கிறார்கள்.

அதற்கப்புறம் காங்கிரஸ்காரரான விருது நகர் திரு சங்கரலிங்கம் தமிழ் நாடு  1957 இல் என பெயர் வைக்கக்கோரி விருது நகர் தேசபந்துமைதானத்தில் 64 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிரையே விட்டார் அப்போது காமராஜர் முதல்வர். சங்கரலிங்கம் அவர்களின் கோரிக்கை காமராஜருக்குப்பெரிதாகப்படவில்லை போலும். ஆனாலும் 1968 இல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைந்ததும் சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ் நாடு என்று பெயரிட்டார்.

சங்கரலிங்கத்தும் முன்னோடியாக தெலுங்கு பேசும் மக்களை உள்ளடக்கிய தனி ஆந்திர மா நிலத்துக்காக போராடியவர் திரு பொட்டி ஸ்ரீ ராமுலு .சென்னை மாகாணத்தில் உள்ள  தெலுங்கு பேசும் மக்களுக்காகப் போராடியவர் அவர். 82 நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பு இருந்து  16 டிசம்பர் 1952 இல் மடிந்தார்.

சங்கங்கள் சார்பிலும் உண்ணா நோன்புபோராட்டம் அவ்வப்போது நடத்தப்படுகிறது 1984 இல் ஒரு 36 மணி நேர உண்ணா நிலைப்போராட்டம் தேசீய தபால் தந்தி மற்றும் தொலைபேசி ஊழியர்களின்  போராட்டம் காரைக்குடி கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் முன்பாக. நான் கலந்து கொண்டேன்.  இரண்டாம் நாள் தாங்க முடியாத  தலை வலி. சங்கத்திலிருந்து அம்ருதாஞ்சன் வழங்கப்பட்டது.

பி எஸ் என் எல் ஆன பிறகும்  நிறுவனத்தை தனியாருக்குக்கொடுக்காதே அரசு வசமே இருக்கட்டும் எனபது போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி அவ்வபோது  இது போல பல போராட்டங்கள் நடந்தது, நடக்கிறது  நடந்து கொண்டே இருக்கிறது இன்னும் நடக்கும். ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணா நிலைபோராட்டம், வேலை  நிறுத்தம் என மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் போல நாங்கள் எழுந்து கொண்டே இருக்கிறோம்

நேற்று கூட ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்( 27/09/2011) இருந்தோம். விருது நகர் பொதுமேலாளர் பி எஸ் என் எல் அலுவலகம் கச்சேரி சாலை மதுரை ரோடு  விரதம்( 27/09/2011) இருந்தோம். அது கிடக்கட்டும்.

ஆயிரக்கணக்கில் கூட்டத்தைக்கூட்டி கார்ப்பொரேட் லெவலில் ஹசாரே ராம்தேவ் போல தொழிலாளிகள் நடத்த முடியாது. அவசியமும் இல்லை

வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விடமாட்டான்-பட்டுக்கோட்டை

விதர்பாவில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்தபோது எதுவும் செய்யவில்லை இந்த ஹசாரே. ரிலையன்ஸ் நிறுவனம் 2500 கோடி ரூபாய்க்கு தொலைதூர அயல் நாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ஏமாற்றியபோது என்ன செய்தார் இந்த ஹசாரே? இப்போதுதான் லஞ்சத்தை முதன் முறையாகப்பார்த்ததுபோல துள்ளிக்குதிக்கிறார். நல்ல முதல்வர் என முஸ்லிம்களை க்கொன்று குவித்த மோடிக்கு சான்றிதழ் வேறு வழங்குகிறார்.

பத்தாண்டுகாலமாக ராணுவத்தின் மக்கள் வெறியாட்டங்களுக்கு எதிராகப்போராடி வரும் ஒரு போராளிக்கு பலவந்தமாக உணவை செலுத்தி மணிப்பூர் ஐரோம் ஷர்மிளாவின் உண்ணா நிலைப்போராட்டத்தைக்குலைத்துவரும் அரசு பற்றிய செய்தி அரிதாக இருக்கிறது  ஆனாலும் அன்னாவுக்கும் ராம்தேவுக்கும் ஊடகங்கள் தரும் கவரேஜ் தொல்லை தாங்க முடியவில்லை.



பள்ளி நாட்களில் அதாவது சின்னப்பத்து (10) பெரியபத்து (11 SSLC) படிக்கிற காலத்தில் மதியம் சாப்பிட வீட்டுக்குசென்ற போது அம்மா களத்துக்கு அல்லது காட்டு வேலைக்கு நாத்து பறிக்க நடவு என்று சென்று விட  அப்பா கூலி வேலைக்குப்போய் விட, பானையில் கை விட்டால் ஒரு பருக்கை தேறாது.  நீச்சத்தண்ணிதான் உணவு.

உண்ண உணவு இருக்கும் நிலையில் ஹசாரேக்கள் ராம்தேவ்களின் இன்றைய அதிரடி உண்ணாவிரத ப்போராட்டங்கள், அறிவிப்புகள்,  ஆர்ப்பரிப்புகள், ஊடகங்களின் ஒருபக்க சாயல்தன்மை ஒரு பக்கம் கிடக்கட்டும்.



குழந்தைகளுக்கே உண்ண உணவில்லாமல் இருக்கும் தேசத்தில் அவர்களுடைய மௌன மொழி யாருக்கேனும் கேட்கிறதா?
அப்படி  என்றால் அந்தக்குழந்தைகள் சாப்பிடாமல் இருந்த நாட்கள் இந்த உண்ணா விரதத்தில் சேருமா?


அப்படிப்பட்ட என் போன்ற குழந்தைகள் mal nutrition   என்ற  நோய்க்கு ஆட்பட்டு சீரழிந்தது சீரழிந்து வருவது  இந்த அரசுக்குத்தெரியுமா?

இதுதான் இன்றைய  மில்லியன் டாலர் கேள்வி.



2 comments:

தமிழ்தாசன் said...

தோழரே ஒரு நாள் உண்ணாவிரதம் இருபவர்களுக்கு என தெரிய போகிறது.
இந்தியாவில் தினமும் ௩௨.௨ % மக்கள் பட்டினியால் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று

அழகிய நாட்கள் said...

நன்றி திரு தமிழ் தாசன்!
"தோழர்களே" பாடல் வந்து சேர்ந்ததா? பசி பலரை சந்திக்குகொண்டு வருகிறது. சிலரை சிந்திக்கும் முனைக்கு கொண்டு வருகிறது.