வலைப்பதிவில் தேட...

Thursday, January 20, 2011

மனிதர்களின் மரணம்

2011 தைப்பொங்கல் திரு  நாளில் கேரளா மா நிலம் சபரி மலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி மரணமடைந்தனர் - செய்தி


இதே புல்மேட்டில் 1999 ஆண்டும் ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதி தினத்தில் நெரிசலில் இறந்து போனார்கள்.


இதே போல ரீதியில் கொத்து கொத்தாக மனிதர்கள் சாவது செய்தியாக ஊடகங்களின் வாயிலாக அறியப்படுவது  உயிருள்ள மனிதர்களின் மனங்களில் கரைந்து போவதுதான்  இன்றைய காலத்தின் கட்டாயமோ உலகமயமாதலின் தன்மையோ என நினைக்கையில் உள்ளம் பதற்றமடைவதைத்தடுக்க முடியவில்லை.


சமீப  காலங்களில்  வாகனப்பெருக்கத்தினாலும் குடி போதையினாலும், சரியில்லாத சாலைகளாலும், வேலைப்பளு காரணமாக வண்டியை விட்டு இறங்க முடியாமல் ஒட்டுவதாலும், சரியான ஒய்வு எடுக்க முடியாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதாலும் விபத்துக்கள் நிகழ்கின்றன.
அதுவும் தங்க நாற்கர சாலையின் துவக்கத்திற்குப்பின் வேகத்திற்கு பஞ்சமில்லாமல் வாகங்கள் பறக்கின்றன. மணிக்கு   நூறு கி மீ வேகத்தில் இப்படி செல்லும் வாகனங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கும் ட்ரக், லாரி அல்ல்து கார்களின் மீது மோதிவிடுவதாலும் உயிர்ச்சேதம் என்பது அதிகரித்தபடி இருக்கிறது. முன்பெல்லாம் விபத்து என்றால் எங்கேயேனும் எப்போதாவது என்று இருந்தது. இன்றைக்கு அதுவே ஒரு தினசரி செய்தியாகி விட்டது.


எழுபதுகளின் துவக்கத்தில் இது போன்ற மரணங்கள் நகர்சார் நாட்டுப்புற பாடல்கள் வடிவில் ராஜா ராணி ஆட்டங்களில் ( குறவன் குறத்தி ஆட்டம்  எனலாம்) பதிவு பெற்றிருந்ததைக்காண முடிகிறது.
இன்றைக்குள்ள அவசர யுகம் பாடல் படைக்க எத்தனிக்கும் கவிஞர்களைக்கூடக்காணாமல் விரட்டி விட்டது.
டாக்டர்  கே ஏ குண சேகரன் அவர்கள் 1988இல் நகர் சார்  நாட்டுப்புறக்கதைகள் என்ற ஒரு தொகுப்பை  வெளியிட்டு இருக்கிறார். வித்தியாசமான படைப்புக்களை தேடித்தேடிப் பதிப்பித்த  சிவகங்கை மீரா அவர்களின் அன்னம் வெளியீடுதான் அந்தப்படைப்பு.


எனது பதின் வயதுகளில் பார்க்கத் துவங்கிய ராஜா ராணி ஆட்டங்களை சாமி ஊர்வலம் தொடங்கும்  மாலை 7 மணி முதல் விடிகாலை  4 மணிக்கு மேலாக கோமாளியாக வந்த மாயி (தங்கலாச்சேரி) என்பவர் மூக்கம்மாவாக மாறு வேஷம் போட்டு தண்டட்டியை குலுக்கி, பிறகு பேயாட்டம் ஆடி முடிக்கும் வரை தொடரும். ராஜபார்ட் மற்றும் இரண்டு பெண்கள் கொண்ட நால்வரின் கலைக்குழுவாக அது இருக்கும்.  நேயர் விருப்பமாக சில பாடல்களை ஊர்க்காரர்கள் கேட்பார்கள். அதை அந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடி சபையை மகிழ்விப்பார்கள்.



"அம்பத்து மூணாம் வருஷம்
மணி எறந்தது அப்பிகை மாசம்"
என்ற மதுரை மணிக்குறவன் பாடல்,

"மாலையிடாப்பொன்னுடல் மறக்குதில்லே என்னுடல்
தேடுகிறேன் தலைவரே தெய்வமே எங்கு சென்றாய்"
என்ற முத்துராமலிங்கத்தேவர் மரணம் சொல்லும்  பாடல்,

அரியலூர் ரயில் விபத்துப்பாடல்,

கருவாயத்தேவன் பாடல்,

புயலில் தனுஷ்கோடி (1964) அழிந்த கதைப்பாடல்,

அதே வருடம் மதுரையில் நிகழ்ந்த சரஸ்வதி பள்ளிக்கூடம் இடிந்த முப்பத்தாறு குழந்தைகள் மடிந்த கதைப்பாடல் (எழுதியவர் மதுரை டி வி பச்சையப்பன்)
அந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடும் போது கண்கள் குளமாவதைத்தவிர்க்க முடியாது.
அந்தப்பாடலின் சில வரிகள்


........
பங்குனி மாதம் ரெண்டாம் தேதியிலே
பட்டப்பகல் வேளையிலே- அன்று மணி
பனிரெண்டாகையிலே- அன்று
பாதகம் நடந்த சனிக்கிழமையிலே
பரீட்சைக்குப்படிக்கையிலே-
ஸ்பெஷல் வகுப்பு பரீட்சைக்குப்படிக்கையிலே


 ..........
முத்துலட்சுமி  ராஜலட்சுமி
மோகனவள்ளி தானம்மா
கலாவதி ரெண்டு சீலாவாம்- அங்கே
முனியம்மா மேரியம்மா
மணிமேகலா செல்லம்மா ரெண்டு மீனா

..........
இப்போது நடக்கும் மரணங்களை மக்களின் மனதில் பதிவு செய்வது யார் என்பது தான் எனது இன்றைய கேள்வி.

No comments: