வலைப்பதிவில் தேட...

Monday, December 27, 2010

தீண்டாமைச்சுவர்கள்

உடுமலைப்பேட்டை அருகில் ஜே ஜே நகர் பகுதியில் ஒரு தீண்டாமைச்சுவர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.தலித் மக்களை அவர்களது குடியிருப்புப்பகுதிகளை முற்றிலுமாக உயர் சாதியென்று கருதுவோர் சுவர் வைத்து பிரித்து தனது சாதீய மேலாண்மையை நிறுவும் முயற்சிதான் இது போன்ற சுவர்களைக்கட்டுவது.

இதற்கு சற்றே முன்பாகத்தான் கோவை நாகராஜபுரம் சுவர் தெரிய வந்தது. அதற்குமுன் திருச்சியில் உள்ள ஒரு இடுகாட்டில் இதே போன்ற சுவர் இருந்தது மக்களின் பார்வைக்கு(சிந்தனைக்குதான் ) வந்தது.

அதற்கும் முன்பாக மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் நீண்ட தீண்டாமைச்சுவர் முதன் முதலாக வெளி வந்தது.


பிரகாஷ் காரட் வரவை ஒட்டி மே 8, 2008 அன்று ஒரு 15 அடி தூரம் இடிக்கப்பட்டது.ஆனாலும் அதை முழுவதுமாக "திருக்குலத்தார்" பயன் படுத்த முடியாத சூழல் இன்னும் இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பிரியமாக அழைத்த வார்த்தைதான் திருக்குலத்தார் என்பது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குதான் எத்தனை எத்தனை பெயர்கள்?
மொத்தமாக அவர்களைக்குறிப்பிடும்போது பஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் அடுத்த கட்டமாக  ஹரிஜனங்கள் ( காந்தியின் பரிசு இது) தாழ்த்தப்பட்டவர்கள், அட்டவணை சாதியினர். அதன் பிறகு தமிழக அரசின் உத்தரவுப்படி ஆதி திராவிடர். அண்ணலின் வார்த்தையின் படி தலித்துகள் ( நொறுக்கப்பட்ட மக்கள்.) இருக்கட்டும் பிரச்னையைப்பார்ப்போம். இம்மக்களுக்குள் உள்ள உட்சாதியினரைப்பற்றி இங்கே குறிப்பிடவில்லை.

திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் இடுகாட்டு சுவரும் கூட கொஞ்சமாக ஆட்கள் நடமாடும் அளவுக்கு இடிக்கப்பட்டது.
கோவையிலும் கூட மொத்தம் 1000 அடியில் ஒரு முப்பது இன்னொரு 23 அடி என்ற கணக்கில் இடிக்கப்பட்டது.

உடுமலைப்பேட்டையிலும் இதுபோல இடிக்கப்படக்கூடும்.
இம்மாதிரியான தீண்டாமைச்சுவர்களின் நீளம் உலகிலேயே இரண்டாவதாக அறியப்படும் மெரினா கடற்கரையின் நீளத்தையும் மிஞ்சுமோ

அல்லது சீனப்பெருஞ்சுவரையும் விஞ்சுமோ என்பதுதான்  இன்றைய  மில்லியன் டாலர் (ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் !!!!) கேள்வி.

Thursday, December 16, 2010

சைவமும் அசைவமும்

காரைக்குடி நண்பர் சித்திரவேலு (முன்னாள் இந்தியன் வங்கி ஊழியர்)தற்போது கேஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க், பஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர். அவரது பையன் காமேஷுக்கும்  மருத்துவர் பாண்டியன் அவர்களின் மகள் மாள்விகாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. 15/12/2010 அன்று நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம்.

எங்களது திருமண வரவேற்பும் கூட இதே நாளில் ஹோட்டல் சுகம் இன்டர் நேஷனல் வரவேற்பரையில் நடந்தது தோழர் ஈரோடு ராஜு தலைமை மூட்டா கணபதி வாழ்த்துரை. இன்னும் FNTO சங்கப்பிரதி நிதியாக நார்மன். NFTE  செயலர் வெங்கடேசன், கேசவன், சுப்ரமணியன், ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மாதர் சங்கத்தின் கமலா NFPE சார்பில் அழகு BTTU   சார்பில் ராஜு, ராஜகோபால், DYFI சார்பில் பாக்கியராஜ் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். வங்கி ஊழியர் சார்பில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் தோழர் சித்திரவேலு. அவரது மகனின் திருமண வரவேற்புதான் நான் குறிப்பிட வந்தது.

வரவேற்பு பகுதியில் கல்கண்டு சந்தனம் மற்றும் மலர்களுடன் மாதர் சங்கத்தி்ன் தோழர் கமலாவும் அவரது கணவரும்  ராதாவும்  சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

நானும் மனைவியும் அங்கு சென்றதன் அடிப்படை காரைக்குடியை விட்டு வந்து இருபது ஆண்டுகள் நகர்ந்து விட்டன.  இருந்த போதிலும் விட்ட குறை தொட்ட குறையென
தொழிற்சங்க நண்பர்கள்,
தொலைத்தொடர்புத்துறை  நண்பர்கள்,
கல்லூரிபபேராசிரியர்
முதல் ரிக்ஷாக்காரர் வரையான ஒரு இழையோடிய உறவுகளின் முகத்தைப்பார்க்கவும் அவர்களின் மனதின் பகிர்வுக்காகவும்  ஒரு ரவுண்டு பார்த்து பேசிவிட்டு (அளவளாவி விட்டு என்று கொள்க)  வந்து விடலாம் என்றுதான் இந்தப்பயணம் அமைந்தது.

காலை எட்டரை மணிக்கு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஹோட்டல் மெரினாவில் டிஃபன் சாப்பிட உட்கார்ந்த போதே எதிர்ப்பட்டவர் தோழர் எம் என் எஸ் வெங்கட்டராமன். தூரத்தில் இருந்த தோழர் எஸ் ஏ பெருமாள் (தோழர் எஸ் ஏ பி தான் எனது திருமணத்தை 10/12/1986 அன்று விருது நகர் சிமினி நந்தவனத்தில் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் என்பது ஒரு முக்கிய விஷயம்).

கல்யாண வரவேற்பில் கோட்டையூர் மெல்லிசைக்கச்சேரி விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

பேராசிரியை ஆவுடையம்மாள், சி பி ஐ கட்சியின் பி எல் ராமச்சந்திரன், மாதா ஜுவல்லர்ஸ் பரஞ்சோதி, வங்கி மாரியப்பன், பத்து என்கிற பத்மனாபன். போஸ்டல் அழகு, அண்ணன் வீரமாகாளி, மோகன் தாஸ்,    ராதாகிருஷ்ணன், வீ. கே பரமசிவன், பாலு, பூமி, சுப்பிரமணியன்,  ரகுபதி ( சயின்டிஸ்ட்) என்று ஒரு பெரிய பட்டியலின்  நண்பர்களைச்சந்தித்தோம்.

காரைக்குடிப்பக்கம்  விருந்து என்றால் அது செட்டி  நாடு சமையல்விருந்துதான். கல்யாண  வீடுகளில் பெரும்பாலும் நான்-வெஜ் உணவுதான் இருக்கும்.
வெஜ்  என்றால் கூட்டம் குறையும். 
குறிப்பாக வெஜ்-ஐ விடவும்
நான்-வெஜ்  மிகவும் பிரமாதமாக இருக்கும்.கோழி, மீன், ராட்டு, நண்டு, எலும்பு சூப்,  நுரையீரல் கூட்டு, முட்டை, மட்டன் சுக்கா கோலா உருண்டை இஞ்சித்துவையல் இன்னும் இது போல...

மண்டபத்தில் சாப்பிட இருபகுதியாகப்பிரித்திருந்தார்கள். ஒன்று சைவம் மற்றொன்று அசைவம. நல்லவேளையாக வைணவ சமையல் என்று எதுவும் இல்லை.

நியாயப்படி பார்த்தால் மரக்கறி உணவு என்றும் புலால் உணவு என்றும் இருந்திருக்க வேண்டும் அதுதான் முறைமை. வழமை பண்பாடு என்று கொள்ள முடியும்.  சைவம் என்று சொல்லுகிறபொழுதில் அதைத்தான் தழுவி சென்று கொண்டிருக்கிறோமா என்று நினைக்கக்கூட நேரம் இல்லாதவர்கள் விரும்பி சாப்பிடுவது புலால் உணவைத்தான்.

புத்தர் தோன்றியதற்கு முன்பிலிருந்து ஆரியர்கள் கூட ஆடு மாடு மேய்த்து வந்த காரணத்தால் அதன் புலாலையே உண்டிருக்கிறார்கள்.  கொல்லாமையென்பதே இப்படிப்பட்ட பழக்க வழக்கத்தை எதிர்த்து உருவானதுதான்.  அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கரர் சைவத்தை வளர்க்க முற்பட்ட நேரத்தில் தான் இராமானுஜர் வைணவத்தை வளர்த்தெடுத்திருக்கிறார். தீண்டாதவரை இவர் அழைத்தது "திருக்குலத்தார்" என்று மரியாதையாக.

காலப்போக்கில் வைணவம் சைவம் இரண்டும் "இந்து" என்கிற பந்தமாகிப்போனதோ? என்னவோ தெரியவில்லை...
புத்தம் சீக்கியம் ஜைனம் எல்லாமே சைவத்தின் கிளையாகிப்போனதோ? பதிலில்லை...
உணவிலும் கூட சைவம் பெரிதென்று ஆகிப்போனதன் விளைவு மாற்றுச் சொல்லாடலாக அசைவம் என்று உருவெடுத்து விட்டதோ என்னவோ!