வலைப்பதிவில் தேட...

Friday, May 14, 2010

இருப்பதும் இல்லாததும்


மனித இனமே வெட்கித்தலைகுனியும் அளவுக்கும் அதிகமாகவே வகுப்புவாதத்தீ குஜராத்தில் எரிந்து கொண்டிருக்கிறது.
72 மணி நேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி விட்டேன் என்று சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார்  குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.

முதல்வராகத்தொடர்வதற்கு அவரை விட்டால் யாருமில்லை; அவர்தான் முதல்வர்; அவரேதான்... என்று வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி;
அதை அப்படியே வழி மொழியும் பாரதப்பிரதமர் வாஜபாய் அவர்கள்.

பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் பற்றிய மே 9 அன்று 72 நாட்களைத்தொட்டும் தொடருகிறது அவலம்.
பற்றி எரிகிறது தலை நகர் அகமதாபாத்.

அரசுப்புள்ளி விபரங்களின் படி,

*இது வரை 1420 பேர் வன்முறைக்கு  பலியாகியிருக்கிறார்கள்
*முகாம்களில் தஞ்சமடைந்துள்ள உடைமையிழந்தவர்களின் எண்ணிக்கை 2     லட்சத்துக்கும் மேல்
* சொத்துக்களுக்கும் ஏற்பட்ட சேதாரம் ரூபாய் 5000 கோடியை த்தாண்டும்
* 22560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
* 43000 பேர் கைது செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்
* 4000க்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்
* 20000 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயிலிடப்பட்டன.
*போலீசார் சுட்டதில் மட்டும் 200 பேர்  மடிந்திருக்கிறார்கள்.
*தொழிற்துறையில் மற்ற மாநிலங்களை விட இருபதாண்டுகள்  பின்னோக்கிச்  சென்று விட்டது குஜராத் மாநிலம்.

2001 ஜனவரி 26ல்   நிகழ்ந்த  பூகம்ப அதிர்வுகளின் போது ஏற்பட்ட இழப்புக்கு சற்றும் குறைந்ததாகப்படவில்லை இப்போது நடைபெற்றுக்ககொண்டிருக்கும் மத பூகம்பம்.

இவ்வளவு அழிவுக்கும் பின்னர் செயலற்ற ஒருமுதல்வரை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

உலக அளவில் இந்தியாவுக்கு அழியாத அவப்பெயரை கோத்ரா நிகழ்வும் அதனைத்தொடர்கின்ற  படுகொலை வன்முறைகளும் ஏற்படுத்தியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் 296 பேர் அரசை ஆதரிக்க, 182 பேர் எதிர்க்க மத்திய அரசு வென்றிருக்கிறது.

போதுமான பலம்  ஆளும்  தேசிய ஜன நாயக கூட்டணிக்கு இல்லாததால்
ராஜ்ய சபாவில் அவர்களே எதிர்கட்சிகளை ஆதரித்து ஒருபக்க "கோல்" போட்ட கதையும் நாடு கண்டது.

"நேற்று இருந்தவர் இன்றில்லை
இன்றிருப்போர்  நாளை 
இல்லாமற் போவர்
இருப்பதும் இல்லாததும்
இதே ரீதியில் நடந்து கொண்டிருக்கும்
........................................................

உண்மை என்ன?
இருப்பதும் இல்லாததும் இரண்டுமே 
உண்மையா....?"


பிரதமர் வாஜ்பாயி அவர்களின் கவிதை வரிகள்தான் மேலே உள்ளவை.

குஜராத்தில் செயல்படாத  முதல்வர் ஒருவர்
இருப்பது ம் இல்லாததும் உண்மையா என
கேட்கத்தோன்றுகிறது நமக்கு.

(மே 2002 கோத்ராவில் இருந்த நேரம் எழுதிய கட்டுரை இது)

No comments: