வலைப்பதிவில் தேட...

Friday, February 19, 2010

சீலக்காரி

'நொண்டி கருப்பசாமிதுணை'
'சீலக்காரி துணை'
'ரிசர்வ் லயன் மாரியம்மன் துணை'
'இருக்கங்குடி மாரியம்மன் துணை'
'மதுரை வீரன் துணை'
என்று நான்கு சக்கர வாகனங்களில் பலவற்றில் அவரவருக்கு உரித்தான குலதெய்வங்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதைப்பார்த்திருக்கிறேன் பலமுறை.

பொதுவாகவே, நமது குலதெய்வங்கள்,நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினரின் மூதாதையர்களோடும் அவர்களது குலத்தொழிலோடும் சம்மந்தப்பட்டு இருப்பதைப்பார்க்க முடியும். இன்றைக்கும் அதனை வழிபடுபவர்கள், அதன் தோற்றம் இருப்பு மற்றும் அதன் பெருமை பேசுவதைக்காணலாம். இப்படிப்பட்ட கிராம தெய்வங்களின் இன்று வரையான நீட்சி நமது வேர்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பொள்ளாச்சி ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கதைகூட இது போன்றதுதான்... ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் நிறைமாத கர்ப்பிணியைப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க, தன்னந்தனியான அந்த தலித் பெண்ணின் போராட்டம் அடர்ந்த அந்த சாணியில் குழந்தை பெற்றுகொண்டு மரணத்தைத்தழுவியதில் முடிகிறது. மாசாணியம்மன் சிலையே உங்களுக்கு அந்தசெய்தியை சொல்லும்.

எங்கள் குலதெய்வம் பற்றிய ஒரு பதிவை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பூட்டன் சுடுகாட்டுக்கு பிணம் எரிக்க செல்லுகிறான் அது ஒரு இரவு நேரம். எரியூட்டிய பிறகு பிணத்துக்கு வேண்டியவர்கள் கலைந்து விட்டார்கள். பிணமும் பாட்டனும் தனியே... இதற்குள் பாட்டனின் பிரிய மகள் அழுது கொண்டே சுடுகாட்டுக்கு வந்துவிடுகிறாள் அவரறியாமல். (பொதுவாக எந்த பெண்களையும் ஆண்கள் சுடுகாட்டுக்குள் அனுமதிப்பதில்லை குறைந்தபட்சம் அன்றைக்கு மட்டும் மறு நாள் பால் ஊற்ற அனுமதிப்பது வேறு..) நரம்புகள் புடைக்க கொழுப்பு உருக தனது இருப்பிடம் மாறி பிணம் கீழே விழ, அந்தப்பக்கம் இருந்த பூட்டனின் மகள் மேல் தீ பற்றிக்கொள்கிறது.. அவளின் அலறல் சத்தமே பூட்டனுக்கு மகளை அடையாளம் காட்டுகிறது. காப்பாற்ற முடியாமல் போன அவளது உயிர் அவலக்குரலுடன் காற்றில் கரைந்து போகிறது. இப்படி பலியானவள்தான் எனது குலதெய்வமான "சீலக்காரி".

No comments: