வலைப்பதிவில் தேட...

Friday, February 5, 2010

பாவத்தின் சம்பளம்



'பாவத்தின் சம்பளம் மரணம் ' என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மரணமடைந்த ஒருவனை சுடுகாட்டில் வைத்து ஈமக்கிரியை செய்யும் ஒருவரைப்பார்த்து என்ன சொல்லுவது ?
பாவத்தில் அல்லது சாதரணமாக (!) மரித்த
ஒருவனுக்கு அவனது உடல் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பவர்களுடைய பாதுகாப்பு கருதி பத்திரமாக பூலோகத்திலிருந்து அனுப்பி வைக்கும் ஒருவரை 'வெட்டியான்' என்று இந்த சமூகம் அழைக்கிறது .

உண்மையில் பார்த்தால் அவர்தான் 'உருப்படியான' வேலை செய்கிறவர் என்று யாருக்கும் புரிவதில்லை. அவர் அந்த வேலையை செய்யவில்லை என்றால் 'எபிடேமிக்' வியாதியால் அநேகர் பாதிக்கப்படுவார்கள் என்கிற விஞ்ஞான பூர்வமான உண்மையை மறுக்கிறார்கள் சாதி என்கிற போர்வையால். எனது முதல் கூலி ஒரு சோவியத் காலண்டர் பையைத்தூக்கியதால் கிடைத்தது என்று' முதல் கூலி ' என்ற எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 இரண்டாவது என்பது பிறந்தவுடன் இறந்து போன அல்லது இறந்தே பிறந்த ஒரு குழந்தையை சுடுகாட்டில் புதைத்ததற்காக கிடைத்தது.
அன்று ஒரு நாள் கன்று போட்ட பசுமாட்டை ஒட்டிக்கொண்டு கால் நடையாக அப்பா மெட்டுகுண்டு வரை சென்று விட்டார். பிறந்த குழந்தை ஒன்று இறந்து விட்டபடியால் அதைப்புதைக்க குழி வெட்ட சொல்லி உத்தரவு பிறபிக்கப்பட்டது. அப்பாவின் வெளியூர்ப்பயணத்தால் அந்த இடத்தில் நான் குலத்தொழில் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். கடப்பாரையும் மண்வெட்டியுமாக சுடுகாடு போய், ஒன்றரை அடிக்கு முக்கால் அடி என்கிற வீதத்தில் ஒரு குழி தோண்டினேன். ஒரு இரண்டு அடி ஆழம்வரை தோண்டவேண்டி இருந்தது. 

தூளியில் வைத்து 'அம்மன் காப்போடு' (வேறென்ன வேப்பிலைதான்) கொண்டுவரப்பட்டது பச்சிளம் தளிர் போன்ற குழந்தை. குழிக்குள் கிடத்தினார்கள். மண்ணைக்கொத்தி குழியை மூடித்துவங்கினேன். முக்கால்வாசி குழி மூடப்பட்டதும் பக்கத்து வேலிக்கருவேலை மரத்தின் இரண்டு கொப்புகளை மண்வெட்டியால் வெட்டி குழிக்குள் திணித்தேன். ( நாய், நரி ஏதும் குழியைப்பரித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு)
மிச்ச மண்ணையும் இழுத்துப்போட்டு மணல் வீடு கட்டுவதைப்போல் கூம்பு வடிவத்தில் குழி என்ற அடையாளம் தெரிய அமைத்தேன்.


பாவமே செய்யாத அந்தக்குழந்தையின் மரணம் எனக்கு சம்பளமாக ரூபாய் பத்து வழங்கியது.

No comments: