வலைப்பதிவில் தேட...

Wednesday, February 3, 2010

முதல் கூலி



கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்
கவலை இல்லை இனி உனக்கு
ஒத்துக்கொள் - பாரதி தாசன்.
பொதுவாக அவரவர் அப்பாவின் வேலையை கற்றுகொள்வதற்கான அறிவுரை என்றுதான் இது புரிந்துகொள்ளப்படவேண்டியிருக்கிறது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வேறென்ன கற்றுக்கொள்ள முடியும். அப்படித்தப்பித்தவறி படித்துவிட்டாலும் கூட வேலை வாய்ப்பு என்பதிலும் கூட சாதி வந்து கும்மாளமிட்டு விடுகிறது. இல்லையென்றால் திண்டுக்கல் பக்கம் ஒரு எம்.ஏ பட்டதாரி ஒரு சில தனியார் பள்ளிகளில் வேலை பார்த்துவிட்டு ஒன்றும் தோதுப்பட்டு வராமல் தனது குலத்தொழிலான செருப்பு தைக்கும் வேலையை செய்ய மனமுவப்பாரா என்ன?
இந்த செய்திகளின் பின்னணியில் எனது நினைவோட்டத்தைப்பகிர நினைக்கிறேன்.
தீவிர எம்ஜியார் ரசிகனான எனது அப்பாவைப்போல் நானும் எம்ஜியார் ரசிகன் ஆனதில் வியப்பேதுமில்லை. மதுரை வீரன் படத்தின் ரிலீஸ் சமயம் அந்தப்படத்தை ௩௬ முறை பார்த்திருக்கிறார் எனது அப்பா. மதுரை வீரன் திரைப்படத்தில் என் எஸ் கே செருப்புதைக்கும் தொழிலாளியாகவும் அவரது வீர மகனாக எம்ஜியாரும் நடித்திருப்பார்கள்.
குலத்தொழில் முறை வேண்டும் என்று ராஜாஜி சொன்னதை எதிர்த்து குரல் கொடுத்த பச்சைத்தமிழன் வாழ்ந்த நாட்டில் சாதி சார்ந்த தொழில் செய்யவேண்டிய நிலையில்தான் இன்னும் சூத்திர பஞ்சம சாதியினர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நானும் குலத்தொழில் செய்முறைக்காக எனது எட்டாவது அரையாண்டு விடுமுறையில் அப்பாவுடன் சேர்ந்து செருப்பு தைக்கப்போனேன். பஜாரில் உள்ள ஒரு கடை அது. சொல்லவேண்டியதில்லை ; வானமே கூரை. வாகனங்களின் இரைச்சல், சிந்திக்கிடக்கும் ஒன்றிரண்டு வத்தல்கள்,மூட்டை தூக்குபவர்கள், ஒயாத சனங்களின் நடமாட்டம், தும்மலை வரவழைக்கும் தூசி ,வெயில் இன்னும் இன்னும்...
ஒருரூபாய் கூலி கேட்டால் பேரம் பேசுவார்கள் கிழிந்த செருப்போடு வந்தவர்கள்.
கனத்த காக்கி கலர் பையும், இன்னொரு கையில் துணிகளடங்கிய ரெக்ஸின்பேக்குமாக கிழிந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்து வந்தார் அப்பாவை நோக்கி ஒருவர்.
சரி செய்ய கூலியாக ஒரு ரூபாய் கேட்டார் அப்பா .முக்கால் ரூபாய்க்கு வந்தவர் சம்மதிக்க வேலையை முடித்துக்கொடுத்தார் அப்பா.
செருப்பை காலில் மாட்டிக்கொண்டே என்னைப்பார்த்து சிரித்தார் வந்தவர்.
அந்த கனத்த காக்கி கலர் பையோடு தனது பேக்கையும் சேர்த்து செல்ல இயலாது என்று யோசித்தாரோ என்னவோ தெரியவில்லை.
'தம்பீ இந்த பையை பஸ் ஸ்டாண்டு வரைக்கும் தூக்கிக்கிட்டுவர்றியா'
நான் அப்பாவைப்பார்த்தேன்.
போய்ட்டு வா என்றார்.
சுமை எனது தலைக்கு ஏறியது வந்தவரின் உதவியால்.
சுருட்டி சுருட்டி இறுக்கமாக திணித்து வைக்கப்பட்டிருந்த காலண்டர்கள் போல் தெரிந்தது. அதன் பளபளப்பும், புதிய தாளுக்கேயுரிய வாசனையுமாக.
அது சோவியத் யூனியன் காலண்டர்கள் என்று அப்போது தெரியவில்லை.
பின்னாட்களில் லைப்ரரி செல்லும் போது யுனெஸ்கோ கொரியர் என்ற பத்திரிகையைப்பார்த்த பிறகுதான் அந்த காலண்டரின் பளபளப்பு புரிபட்டது.
வந்தவர் முன்னால் நடக்க நான் சுமையோடு அவரின் அடியொற்றி மாரியம்மன் புக் ஸ்டோர்சிலிருந்து கிளம்பி, ரத்தினம் பட்டணம் பொடி கடைதாண்டி, மாரியம்மன் கோவிலில் இருந்து திரும்பி, தேர் முட்டி,பொட்டல் வழியாக வந்து மூளிப்பட்டி அரண்மணை கடந்து, உடுப்பி ஹோட்டல், சென்ட்ரல் சினிமா வழியாக வந்து எம்.எஸ்.பி பஸ் ஸ்டாண்டின் தெற்கு நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம்.
காலண்டர் சுமையை வந்தவரின் உதவியால் இறக்கி வைத்தேன்.
படிக்கிறியா என்றார்.
எட்டாவது என்றேன்
நல்லாப்படி என்று சொல்லிக்கொண்டே தனது பர்சிலிருந்து ஒரு பித்தளை இருபது பைசா நாணயத்தை எனக்கு கொடுத்தார்.
நாணயத்தில் ஒருபுறம் நமது நாட்டின் தேசியப்பூவான தாமரை
மறுபக்கம் என்னைப்பார்த்து சிரித்த வண்ணம் எம்.கே காந்தி.

No comments: